தஞ்சை அரசு மருத்துவ மனையில் தீ விபத்து; பதறி ஓடிய கர்ப்பிணிகள்

தஞ்சை அரசு மருத்துவ மனையில் தீ விபத்து; கர்ப்பிணி பெண்கள், உறவினர்கள் பதற்றம்; விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த ஊழியர்கள்; மாவட்ட ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு

தஞ்சை அரசு மருத்துவ மனையில் தீ விபத்து; கர்ப்பிணி பெண்கள், உறவினர்கள் பதற்றம்; விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த ஊழியர்கள்; மாவட்ட ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு

author-image
WebDesk
New Update
Thanjavur hospital

தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிசேரியன் இல்லாமல் நார்மலாக சுக பிரசவம் அதிக அளவில் நடந்து வருவதால் கர்ப்பிணி பெண்கள் அதிகமாக இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisment

இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான சுக பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

இந்த நிலையில் இன்று மதியம் திடீரென பிரசவ வார்டின் முதல் தளத்தில் தீ பற்ற தொடங்கியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பிரசவத்திற்காக வந்திருந்த கர்ப்பிணி பெண்கள், உடன் வந்த உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினர். அப்போது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவிக்கொண்டு ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், தகவல் அறிந்து உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

Advertisment
Advertisements

மேலும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

க.சண்முகவடிவேல்

Fire Accident Thanjavur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: