தஞ்சாவூர் அரசு மருத்துவமனை தீ விபத்து: நோயாளிகளைக் காப்பாற்றிய தற்காலிகப் பணியாளர்கள்- கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

சுமார் 40 பணியாளர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுமார் 40 பணியாளர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

author-image
WebDesk
New Update
Thanjavur

Thanjavur hospital fire accident

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில், தற்காலிகப் பணியாளர்கள் துணிச்சலாகச் செயல்பட்டு தாய்மார்களையும் பச்சிளம் குழந்தைகளையும் காப்பாற்றியுள்ளனர். ஆனால், சுமார் 40 பணியாளர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisment

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி மகப்பேறு சிகிச்சைப் பிரிவு வார்டில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வார்டு முழுவதும் புகை சூழ்ந்தது.

வார்டில் குழந்தை பெற்ற பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த, சிகிச்சையிலிருந்தவர்களின் உறவினர்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் பணியிலிருந்த தற்காலிகப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள், செவிலிய பயிற்சி மாணவிகள் ஆகியோர் சிகிச்சையிலிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பத்திரமாகக் காப்பாற்றினர்.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் செய்த இந்த செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisment
Advertisements

Thanjavur hospital fire acciden

இதையடுத்து தீ விபத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், விபத்தில் உயிர்ச் சேதமும் இல்லை, யாருக்கும் காயமும் இல்லை. யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  தீயை அணைக்க முயன்ற மருத்துவமனை பணியாளர்கள் 2 பேருக்கு மட்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனதாக கூறினார்.

ஆனால் வார்டில் இருந்தவர்களைக் காப்பாற்றிய தற்காலிகப் பணியாளர்கள் சுமார் 40 பேர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் இதை வெளியே தெரியாமல் மாவட்ட நிர்வாகம் மறைத்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

Thanjavur hospital fire acciden

மேலும் மீடியாக்களுக்கு செய்தி தெரிந்ததும் சிகிச்சையில் இருந்தவர்களை உடனடியாக கட்டாய டிஸ்ஜார்ஜ் செய்து அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து சிகிச்சையிலிருந்த பணியாளர்கள் சிலர் கூறுகையில், "இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுப் புகை எங்கும் பரவியது. நாங்கள் கொஞ்சம் கூட எங்களைப் பற்றி யோசிக்காமல் மாடியிலிருந்து வீல் சேரில் பெண்களை உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு தரைப்பகுதிக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வந்துவிட்டோம்.

அதே போல் குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டோம். கிட்டதட்ட 30 தாய்மார்கள், 24 குழந்தைகள் என 54 நான்கு பேரை மீட்டோம். எந்த உயிரும் போய்விடக்கூடாது என்பதற்காக எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த செயலைச் செய்தோம். இதில் புகையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் என 40 பேர் பாதிக்கப்பட்டோம்.

எங்களை உடனடியாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதேநேரம், மாவட்ட ஆட்சியரோ இரண்டு பணியாளர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் அவர்களும் நலமுடன் இருப்பதாகவும் பேட்டி கொடுத்தார்.
இதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதன் பிறகு நாங்கள் சிகிச்சையில் இருப்பதையே வெளியில் தெரியாமல் மறைத்தனர்.

Thanjavur hospital fire acciden

உயிர்ப் பலி எதுவும் ஏற்படாமல் பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்த்த எங்களை மாவட்ட ஆட்சியர் வந்து பார்க்கவில்லை. நாங்கள் செய்த வீரதீர செயலைப் பொறுப்பு அமைச்சர் கோவி.செழியன் கவனத்துக்கும் கொண்டு செல்லவில்லை.
இதற்கிடையே, உங்களுக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு, நிவாரணம் எதுவும் குடுப்பாங்கனு இங்க படுத்து கிடக்குறீங்களானு டாக்டர்கள் சிலர் எங்கள் காதுப்படவே பேசினார்கள். பாராட்டி வாழ்த்த வேண்டிய எங்களை வேதனைக்கு ஆளாக்கினர்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் மீடியா ஆட்களுக்கு இந்த தகவல் தெரிந்து வார்டுக்கு வந்தனர். இதனால் திடீரென மருத்துவமனை நிர்வாகம் எங்களைத் திடீரென டிஸ்ஜார்ஜ் செய்துவிட்டது.

புகையினால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் ரிசல்ட் வந்த பிறகு டிஸ்ஜார்ஜ் என்றவர்கள் அவசரமாக வீட்டுக்கு அனுப்பியது ஏன்" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயல்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்    

Thanjavur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: