தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரிவு உபச்சார விழாவில், மேயரும் ஆணையரும் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தவர் சரவணக்குமார். சமீபத்தில் சரவணக்குமார் கரூர் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், சரவணக்குமாரின் பிரிவு உபச்சார விழா இன்று தஞ்சை மாநகராட்சியில் நடைபெற்றது. அப்போது மேயர் சன் ராமநாதன் ஆணையர் சரவணக்குமாரை வாழ்த்தி பேசுகையில், கண்ணீர் விட்டு அழுது பேச முடியாமல் தவித்தார்.
பின்னர் ஏற்புரை ஏற்ற ஆணையர் சரவணக்குமாரும் கண்ணீருடனே பேசினார். அவர் பேசுகையில், திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இங்கு (தஞ்சை) மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டேன். என்னுடைய பணிக்காலத்தில் கட்சி வித்தியாசம் இல்லாமல் பணியாற்றியுள்ளேன். திருப்பூரிலிருந்து மாறுதலாகி வந்தப்போது, கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் என்னிடம் கூறியது, நீங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள், தற்போது தமிழக முதல்வரின் மாவட்டத்திற்கு மாறுதலாகி செல்கிறீர்கள், கட்டாயம் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள், நீங்கள் அங்குச் சென்று உங்கள் பணியை தொடருங்கள் என்று சொன்னார்கள்.
முதல்முறை தஞ்சை வந்தப்போது, தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி, பெரிய கோவிலில் வழிப்பட்டுவிட்டு பணியில் சேர்ந்தேன். அடுத்ததாக மாநகராட்சி தேர்தல் வந்தது. அதனை முன்மாதிரியாக நடத்தினோம். எனக்கும் மேயருக்கும் சகோதர உணர்வுடன் கூடிய நட்பு இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தோம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்ததால், நிறைய பணிகளை வேகமாகச் செய்ய முடிந்தது. இவ்வாறு ஆணையர் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“