அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி நீடிக்குமா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் நாளை (செப்.25) முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக என் மண் என் மக்கள் நடை பயணத்தின்போது பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, கடந்த காலத்தில் சி.என். அண்ணாத்துரை மற்றும் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் இடையே கோபமாக நடந்த உரையாடல் பற்றி குறிப்பிட்டார்.
அப்போது திமுக நிறுவனத் தலைவர் சி.என் அண்ணாத்துரை மன்னிப்பு கேட்டு மதுரையில் இருந்து வெளியேறினார் எனக் கூறினார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக பேசினார்கள்.
எனினும் அண்ணாமலை இந்த விவகாரத்தில் பின்வாங்க மறுத்துவிட்டார். வழக்கு தொடுத்தால் நீதிமன்றத்தில் சந்திப்பேன் எனக் கூறிவிட்டார்.
இதற்கிடையில் டெல்லி சென்ற அதிமுக பிரதிநிதிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க முயன்றனர்.
ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்திக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து அவர்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துவிட்டு சென்னை திரும்பினர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“