ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் அவர்களின் கல்யாண நாளை மறக்காவே மாட்டார்கள். பொதுவாகவே கல்யாணம் ஆன பெண்ணை அழைத்து அவர்களின் திருமண நாள் பற்றி கேட்டால் உடனே வெட்கத்தில் முகம் சிவந்து விடும். அல்லது எண்ணற்ற மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வந்துவிடும்.
மணப்பெண் ராசாத்தி எடுத்த ரிஸ்க் :
ஆனால் ராசாத்தியின் வாழ்க்கையில் இனி கல்யாண நாள் என்றால் பயம் தான் வந்து போகும். எந்த ஒரு புதுமைப் பெண்ணும் எடுக்க தயங்கும் ஆபத்தான செயலை மணப்பெண்ணான ராசாத்தி எடுத்துள்ளார்.
திருமணத்தன்று மழை பெய்தால், உடனே மணப்பெண் சிறுவயதில் நிறை அரிசி சாப்பிட்டு இருப்பார். அதான் இப்படி மழை அடிக்கிறது என்பார்கள் பெரியவர்கள்.அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்று வரை தெரியவில்லை. அப்படி ஒருவேளை இது உண்மை என்றால் மணப்பெண் ராசாத்தில் ஒரு லாரி அரிசி சாப்பிட்டு இருக்க வேண்டும்.
ஏனென்றால் அவரின் திருமணத்தில் வந்தது மழை அல்ல வெள்ளம். ஆனால் கரைப்புரண்டு ஓடிய வெள்ளத்தால் கூட ராசாத்தியின் திருமணத்தை நிறுத்த முடியவில்லை என்பது தனிச்சிறப்பு.
ஈரோடு மாவட்டம் தெங்குமரஹடா கிராமத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி. இவருக்கும் கோவை மாவட்டம் ஆலாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் நாளை மறுதினம் இவர்களின் திருமணம் நடக்கவுள்ளது.
இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள ராசாத்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது உயிரையே பணயம் வைத்தனர். தெங்குமரஹடா கிராமத்தை ஓட்டியுள்ள மாயாற்றில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் கரைப்புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்வதற்கும், வெளியில் இருப்பவர்கள் இந்த கிராமத்திற்கு வருவது பரிசல் மூலம் தான். மாயாற்றில் இயக்கப்படும் இந்த பரிசல் மூலம் கிராம மக்களின் போக்குவரத்து.
இந்நிலையில் கடந்த 1 வாரமாக ஆற்றில் வெள்ளம் பாய்ந்து வருவதால் பரிசல் இயக்கபடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மணப்பெண்ணான ராசாத்தி திருமண சடங்குகளில் கலந்துக் கொள்ள சிறுமுகை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், நிச்சயித்த நாளில் திருமண நடந்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்த பெண் வீட்டார், கிராம மக்கள் மற்றும் வனத் துறையினர் உதவியை நாடினர். அந்த கிராமத்தில் சிறப்பாக பரிசல் ஓட்டுபவரை அழைத்து அவரிடம் திருமணம் குறித்த முழு விபரத்தையும் கூறியுள்ளனர்.
உடனே அந்த நபர், ”என்னால் முடியும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் வெள்ளத்தை கடந்து விடலாம் “ என்று கூறியுள்ளார். பரிசல் ஓட்டுபவரை தெய்வமாக நினைத்து மணப்பெண் ராசாத்தின் அவரின் குடும்பத்தார் மாயாற்றின் வெள்ளத்திலியே பயணம் செய்ய முடிவு எடுத்தனர்.
பரிசல் ஓட்டுபதில் வித்தகரான அந்த நபர், தனது உயிரையும் பணயம் வைத்து பரிசலை இயக்கினார். வெள்ளத்தில் இருந்து அவர்கள் அனைவரும் ஜஸ்ட் மிஸில் கரை சேர்ந்தனர். அங்கிருந்து பேருந்து மூலம் சிறுமுகை சென்று அடைந்தனர்.
ராசாத்தியின் இந்த சாகச பயணம் அனைத்து செய்தி தாளிலும் வெளிவந்துள்ளது. அத்துடன் மணப்பெண் குடும்பத்தார், சீறிச் செல்லும் தண்ணீரை கடந்து, பரிசல்களில் சென்ற காட்சி, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.