பஸ் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சேப்பாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலினும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழியுடன் வைகோவும் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டத்தை கண்டித்து, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதிமுக அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று பிரச்சினையை தீர்க்கவில்லை. போக்குவரத்து கழகங்களில் தற்போது தலைவிரித்து ஆடும் ஊழல் தான் பிரச்சினைக்கு காரணம். பேருந்து டிக்கெட் அச்சிடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது.
டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு கூறுகிறது. அப்படியானால் டீசல் லிட்டருக்கு 40 ரூபாய் அளவில் விற்பனையானபோது அந்த லபாம் எங்கே போனது? பேருந்து கட்டண உயர்வால் மாணவர்கள், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி கவலையின்றி கட்டண உயர்வை திரும்பப் பெற முடியாது என தமிழக அரசு கூறி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற கவுரவம் பார்க்காமல், நானே முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு பேசினேன். ஆனால் அவரிடம் இருந்து முறையான பதில் இல்லை.
போக்குவரத்துறையை லாபம் ஈட்டும் துறையாக திமுக ஆட்சிக்காலத்தில் பார்க்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் துறையாகவே பார்த்தோம். ஆனால் அதிமுக அரசு அப்படி பார்க்கவில்லை. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் இன்றுடன் முடிவடைந்து விடப்போவதில்லை. கட்டண உயர்வை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நடைபெறும்’’ என்று கூறினார்.
வட சென்னை திமுக சார்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.