/indian-express-tamil/media/media_files/zThVMWuFBskwwyO3IacF.jpg)
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டு இருந்தது.
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான ரிப்போர்ட்டை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, "டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது.
கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன
அதில், "மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.