புதுச்சேரியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டையொட்டி மாநாடு நடைபெறும் இடம் சிறப்பாக தயாராகி வருகிறது. நகரப்பகுதி முழுவதும் ஜி-20 மாநாடு சின்னத்தால் வண்ணமயமாக்கப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டு உள்ளது.
உலக நாடுகள் அங்கங்கம் வகிக்கும் ஜி-20 க்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கிறது.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ஜன.30 மற்றும் ஜன.31 என இரண்டு நாள்கள் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜி-20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வரவுள்ளதையொட்டி புதுச்சேரி மாநிலம் நகரப்பகுதிகள் அவர்களை வரவேற்க தயாராகி வருகிறது.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. நாளை புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் மாநாட்டு கருத்தரங்கு சிறப்பாக நடைபெறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி ஜி-20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வரும் சாலைகள் முழுவதும் புதியதாக போடப்பட்டுள்ளது. மேலும் வழி நெடுங்கிலும் அவர்களை வரவேற்கும் வகையில் ஜி-20 மாநாட்டு பேனர் மற்றும் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் தேசிய கொடிகளும் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டு பிரதிநிதிகளை வரவேற்க தயாராக உள்ளது. மேலும் நகரப்பகுதி முழுவதும் சுத்தமாகவும், கண்களை கவரும் வகையிலும் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
நகர பகுதிகள் மற்று அரசு கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையிலும், சுற்றுலா தலமாக வெளிப்படுத்தும் வகையிலும் நகரம் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநாட்டில் 75 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் என்றும், டிஐஜி தலைமையில் 37 பேர் கொண்ட அரக்கோணம் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், விமான நிலையம், அவர்கள் செல்லும் வழிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாநாட்டையொட்டி ஜி20 சின்னத்தை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 மைய கருத்தை முன்வைத்து பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/