சசிகலாவின் குடும்பத்தினர் அவரது உறவினர்கள் உள்பட 190 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடாக இருந்த நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம், டிடிவிக்குச் சொந்தமான புதுவை இல்லம், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீடு, அவரது சகோதரர் விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, டாக்டர் வெங்கடேஷ், அவரது மருத்துவமனை, மன்னார்குடியில் உள்ள திவாகர் வீடு, கல்லூரி, அவரது மகன் விஜயானந்த் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். தினகரன் ஆதரவாளரான கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியின் பெங்களூரு வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.
ஓரே நேரத்தில் 190 இடங்களில் வருமான வரி சோதனை நடப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள்.
அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் ரெய்டு எதுவும் நடக்கவில்லை என அவரே நிருபர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். ரெய்ட் நடக்கும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெய்டு நடக்கும் இடத்தில் இருந்து யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.
ரெய்ட் குறித்து த.மா.கா தலைவர் ஜி.ஏ.வாசனிடம் கேட்ட போது, ‘’சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை சோதனை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பொதுநலத்தோடு வருமானவரித்துறை செயல்பட வேண்டும். எந்த அசியல் நோக்கமோ, உள்நோக்கமோ இருக்க கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.