புதிய தலைமை செயலக கட்டிட கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்திலிருந்து உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்துள்ளார்.
நீதிபதி ரகுபதி ஆணையம்:
புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்தாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விசாரணை ஆணையம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வரான மு.க.ஸ்டாலின், முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சார் துரைமுருகன் ஆகியோருக்கு 2015ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் ஆணையம் அமைக்கப்பட்டப உத்தரவை ரத்து செய்யவும், தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவும், ஆணைய நடைமுறைகளை எதிர்த்தும் மூவரும் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் ஆணைய விசாரணைக்கு 2015 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
தடையை நீக்கக்கோரி ஆணையம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மேலும் ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ரகுபதி ஆணையத்துக்கு வழங்க கூடிய நிதி மற்றும் சலுகைகள் அனைத்தையும் அரசு நிறுத்த வேண்டும்.
யார் காரணம் :
ரகுபதி ஆணையம் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அனைத்து விசாரணை ஆவணங்களையும் இரண்டு வாரத்தில் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
செயல்பாட்டில் இருக்கும் விசாரனை ஆணையங்கள் அவசியமா? என்பதை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஆணையத்தின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஆணையத்தின் விசாரணை 3 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்ததற்கு ஆணையம் காரணம் அல்ல என்றும் உயர் நீதிமன்றம் விதித்த தடையும், அதை நீக்க கோரி பல முறை தங்கள் தரப்பில் முறையிட்டும் அதை விசாரிக்காததுமே காரணம் என குறை கூறியுள்ளார்.
மேலும், குறுகிய காலத்தில் தன்னால் இயன்றவரை ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தர்ம சங்கடம்:
ஓய்வுபெற்ற பிறகும் ஏதேனும் பதவியை தேடி ஓடுவது போல நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது, உச்ச மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிபதிகளுக்கு பெருத்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிபதியின் ஆகஸ்ட் 3 ஆம் தேதி உத்தரவு, ஆணையத்தை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை மறைமுகமாக ரத்து செய்வது போல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மௌலிவாக்கம் கட்டிட விபத்தில் 65 பேர் பலியானது குறித்து, 45 நாட்களில் எவ்வித ஊதியமும் இல்லாமல் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போது இந்த ஆணையத்தில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை என்பதால் ராஜினாமா செய்வதாகவும், தனக்கு வழங்கப்பட்ட இன்னோவா கார் மற்றும் கணிப்பொறி உள்ளிட்டவற்றை ஒப்படைப்பதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.