சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேட்டில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட தொடங்கியது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு செல்ல கூடுதல் இணைப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புறநகர் ரெயில் நிலையம் அமைக்க வேண்டுமென்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை, தமிழ்நாடு அரசு மேற்கொண்டு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி கிளாம்பாக்கம் பஸ் முனையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. வண்டலூர்- ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தாமதமானது.
இந்த சூழலில் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு மே மாதம் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.