பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டு 2021-ல் வெளியானது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி இது தொடர்பாக முறையான புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
தொடர்ந்து டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ராஜேஷ் தாஸ் வழக்கை 3 மாதத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது. இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ளனர்.
டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது விழுப்புரம் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், தன்னுடைய சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தனக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/