இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவரை இதர பிற்படுத்தப்பட்டோர் ஆக கருதமுடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நான் உள்பட எனது குடும்பத்தார்கள் 2008ஆம் ஆண்டு இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் ஆக மாறினோம். இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு நான்,தமிழ்நாடு தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தேன்.
அப்போது, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசி) என்ற பிரிவில் விண்ணப்பித்தேன். இதையடுத்து எழுத்துத் தேர்வும் எழுதி இருந்தேன். எனினும் இறுதிப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை.
என்னை பொதுப் பிரிவில் பரிசீலித்து உள்ளனர். என்னை பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆக கருதி வேலை வழங்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர், 2015ஆம் ஆண்டு மண்டல துணை வட்டாட்சியர் அளித்திருந்த லெப்பை சாதி சான்றிதழையும் சமர்பித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் இராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்.
அதில், சத்திய மூர்த்தி என்பவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார் என்றும் இது அவரின் விருப்பத்தின் பேரில் நடந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என்பதை ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அறிவிக்க முடியாது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்த உத்தரவு சரிதான் எனக் கூறி உத்தரவிட்டார். மேலும், அக்பர் அலியின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil