/tamil-ie/media/media_files/uploads/2023/08/Minister-inspects-ESI-Hospital.jpg)
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு நடத்தினார்.
கோவை துடியலூர் பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள ஊசி போடும் அறை, மருந்து கிடங்கு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அறை ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன் மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் பார்வையிட்டார்.
அப்போது மருத்துவமனை வளாகத்தில் புல் புதர் மண்டி கிடப்பதாகவும் விஷப் பூச்சிகள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு முன்பாக அவற்றை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் நேரில் பார்வையிட்டு அங்கு கிடைக்கக்கூடிய மருத்துவ உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்துள்ளோம்.
தொழிலாளர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதை முற்றிலும் ஒழிக்கவும் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி தினசரி எவ்வளவு பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர் என்ற விபரத்தை கேட்டறிந்தோம்.
மருத்துவமனையை சுற்றிலும் தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.