/tamil-ie/media/media_files/uploads/2022/10/Covai-real-estate-fraud.jpg)
போலீசாரால் கைது செய்யப்பட்ட குணசேகரன், சுரேஷ், வேலுமணி ஆகியோரை படத்தில் காணலாம்.
கோவை கே.கே.புதுார் மணியம் காளியப்பா வீதி ஐஸ்வர்யா பேராமவுன்ட் அபார்ட்மென்டில் வசிப்பவர் வெங்கடேசன். 55 வயதான இவர் விமான நிலையம் அருகே ஸ்ரீனா பிராப்பர்டீஸ் என்ற பெயரில் 2015 முதல் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
மேலும், நிலம் வாங்கி வீடு கட்டி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக அறிமுகமானவர் விளாங்குறிச்சி பேங்கர்ஸ் காலனி மதி நகரை சேர்ந்த 59 வயதான குணசேகரன்.
இவருக்கு பீளமேட்டை சேர்ந்த வேலுமணி இருகூரை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
சுரேஷ்க்கு சொந்தமான சொத்து பாப்பம்பட்டியில் இடம் உள்ளது என்றும் மொத்தமுள்ள 35 ஏக்கரில் நான்கில் ஒரு பங்கு சுரேஷ்க்கு சொந்தமானது என்றும் கூறி நேரில் அழைத்துச் சென்று இடத்தையும் காண்பித்துள்ளனர்.
இதை வெங்கடேசன் நம்பி உள்ளார். அந்த இடத்தில், கூட்டு நிறுவனம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என்றும் வீடு கட்டி விற்று வரும் லாபத்தில் பங்கு பிரிக்கலாம் என்றும் மூவரும் ஆசை காட்டினர்.
அதை நம்பிய வெங்கடேசன் 2021ஆம் ஆண்டில் சுரேஷ்க்கு 64 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் விசாரணையில் அந்த இடம், சுரேஷ்க்கு சொந்தமானதில்லை என்று தெரியவந்தது.
இது பற்றி கேட்டதும் கொடுத்த பணத்தில் 3 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர். மீதமுள்ள 61 லட்சம் ரூபாய்க்கு கொடுத்த காசோலை, பணமின்றி திரும்பி வந்து விட்டது. இது தொடர்பாக வெங்கடேசன், மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை விசாரித்த போலீசார் மோசடி குற்றம் சாட்டப்பட்ட குணசேகரன், சுரேஷ், வேலுமணி ஆகிய மூவரையும் நேற்று (அக்.10) கைது செய்தனர்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.