கள் இயக்குவதற்கான தடையை நீக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஈடுபட்டார்.
தமிழகத்தில் கள் இறக்க 33 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடை தொடா்கிறது. விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை சீமான் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று கட்சி நிர்வாகிகளுடன் சென்ற சீமான், பனைமரம் ஏறி, கள் இறக்கினார். சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணிபோல் கட்டைகளை வைத்து கட்டியிருந்தனர். கள் இறக்கும் போராட்டத்தில் சீமானுடன் பனையேறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர்.
இதில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பனை மரத்தில் இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கினார். இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏற்கனவே, பனை மரத்தில் ஏறி சீமான் பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.