நீதிபதி கிருபாகரனை முகநூலில் விமர்சித்த ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த செப்டம்பர் மாதம் போராட்டங்கள் நடத்தினர். முதலில் மாவட்ட தலைநகரங்களிலும், சென்னையில் மிகப்பிரமாண்டமான ஊர்வலத்தையும் நடத்தினர்.
அதன் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல், மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் மனம் உடைந்த மாணவர்கள், அவர்தம் பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க குழு அமைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி கிருபாகரன் குறுக்கிட்டு, ’’ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த நீதிமன்றம் பலமுறை கண்டித்துள்ளது. போராட்டத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்கங்கள், அரசிடம் இருந்து வசூலித்து இழப்பீடு கொடுக்க உத்தரவிட நேரிடும். அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் சங்கம் வைத்து போராடி வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராடவில்லை. ஆசிரியர்கள் சங்க போராட்டத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’’ என கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
இதையடுத்து பலரும் நீதிபதி கிருபாகரனை கண்டித்தும் கிண்டல் செய்தும், சமூக வலை தளங்களில் எழுதி வந்தனர். இது குறித்து நீதிபதி கிருபாகரன், கோர்ட்டில் தன வருத்தங்களை பதிவு செய்தார். பின்னர் நீதிபதிகளை விமர்சனம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என போலீசாரிடம் கேட்டார்.
இதையடுத்து சமூக வலை தளங்களில் நீதிபதி கிருபாகரனை விமர்சனம் செய்த 15 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில் வேலூர் சாத்துவாச்சேரியைச் சேர்ந்த ஆசிரியை மகாலட்சுமி என்பவர் தனது முகநூல் பக்கத்தில், நீதிபதி கிருபாகரனை விமர்சித்ததற்காக இன்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆசிரியர்களுக்கு நீதிபதி கிருபாகரன் கண்டனம் செய்தியைப் படிக்க...