92% ரயில்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகின்றன: தென்னக ரயில்வே மேலாளர் தகவல்
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கொடுத்த கட்டளையை மட்டும் ஏற்று செயல்பட்டு வந்த மோப்ப நாய்கள், தமிழ் மொழியில் கொடுக்கப்பட்ட உத்தரவுக்கும் கீழ்ப்படிந்து நடந்துக்கொண்டன.
92% ரயில்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகின்றன என தென்னக ரயில்வே மேலாளர் தெரிவித்தார்.
திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன் தேசியக் கொடியை நேற்று ஏற்றி வைத்தார்.
Advertisment
அதனைத் தொடர்ந்து எம்.எஸ்.அன்பழகன் சுதந்திர தின உரையாற்றுகையில், “தென்னக ரயில்வே கடந்த நிதியாண்டை காட்டிலும் இந்த நிதியாண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. 80 விழுக்காட்டில் இருந்து 89 விழுக்காடாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல சரக்குகளை கையாளும் முணையத்தில் 24% கூடுதலாக சரக்குகளை கையாண்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கையும் 9% அதிகரித்துள்ளன” என்றார்.
மேலும், “தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு உட்பட்டு இயக்கப்படும் ரயில்கள் கடந்தாண்டு 88 விழுக்காடு நேரம் தவறாமல் இயக்கப்படுகின்றன. இந்தாண்டு 92.5 விழுக்காடு சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய மீனா, தமயந்தி, சிவக்குமார், ஸ்ருதி ராஜ் ஆகியோரை கௌரவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதேபோல், வெடிபொருள்களை கண்டறிவது உள்ளிட்ட புலனாய்வுக்கு பயன்படுத்தப்படும் மேக்ஸ், டான், ராக்கி என்ற மூன்று மோப்பநாய்கள் தங்களது திறமையை மைதானத்தில் வெளிப்படுத்தியன.
இதன் பயிற்சியாளர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கொடுத்த கட்டளையை மட்டும் ஏற்று செயல்பட்டு வந்த மோப்ப நாய்கள், தமிழ் மொழியில் கொடுக்கப்பட்ட உத்தரவுக்கும் கீழ்ப்படிந்து நடந்துக்கொண்டன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர், புல்லட் வீரர்கள், ரயில்வே பாதுகாப்பு படை பெண் வீராங்கனைகள் அதிநவீன துப்பாக்கிகளை கொண்டு சாகசங்களை நிகழ்த்தினர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“