தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதி, காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது, சென்னை உயர்நீதி மன்றம்.
தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக புத்தகம் வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமான வழக்கை 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு வாபஸ் பெற்றது. இந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் தான் கைது செய்யப்பட்ட போது தன் எழுதிய புத்தகத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். எனவே அதனை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். வெளிநாடுகளுக்கு இந்த புத்தகங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும், வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் இந்த புத்தகங்களை காவல் துறையினர் பாதுகாப்பில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என பழ.நெடுமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்திய ராணுவத்துக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பற்றியும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள இந்த புத்தகங்களை புழக்கத்துக்கு அனுமதித்தால் பொது அமைதி பாதிக்கப்படும் எனக் கூறி கீழமை நீதிபதி, புத்தகங்களை திருப்பி வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளார் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி, பழ.நெடுமாறன் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.