தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் வருகின்ற 2025 ஜூன் 2 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.2025 ஏப்ரல் 25ம் தேதி தொடங்கிய விடுமுறை, நாளையுடன் (2025 ஜூன் 1ம் தேதி) முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் காலை உணவு திட்ட மெனுவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பான 2025 ஜூன் 2ம் தேதி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும். அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தம், வாரத்தில் இரு தினங்கள் அதாவது திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் பொங்கல் வழங்கவும், வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா வழங்கப்படவும் உள்ளது.
இதுகுறித்து சமூக நல ஆணையர் லில்லி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் கீழ் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது வார நாட்களில் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இந்த முதலமைச்சர் காலை உணவு திட்ட மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளி சமையல் கூடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமையல் கூடங்களில் அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக திங்கள் கிழமைகளில் பொங்கல் வழங்கப்பட இருக்கிறது.
வாரத்தில் இரு தினங்கள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் பொங்கள் வழங்கப்பட வேண்டும். எனவே, பள்ளிகள் திறப்பான 2025 ஜூன் 2ம் தேதி திங்கட்கிழமை பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட வேண்டும். பள்ளி சமையல் கூடங்களில் திங்கட்கிழமைகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கோதுமை ரவை உப்புமா இனிமேல் வியாழக்கிழமை நாட்களில் வழங்கப்படும். பள்ளி சமையல் ஒப்பந்ததார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமையல் கூட ஒப்பந்ததார்கள் இதனை செயல்படுத்துவதை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாற்றியமைக்கப்பட்ட உணவு பட்டியல்:
திங்கள் கிழமை:
ராகி உப்புமா – முருங்கைக்காய் சாம்பார்
கம்பு சேமியா உப்புமா – சிறுதானிய காய்கறி சாம்பார்
பொங்கல் – காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா – பசலைக் கீரை சாம்பார்
செவ்வாய் கிழமை:
ராகி காய்கறி கிச்சடி
கம்பு சேமியா காய்கறி கிச்சட
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவா காய்கறி கிச்சடி
புதன் கிழமை:
பொங்கல் – முருங்கை சாம்பார்
குதிரைவாலி வெண்பொங்கல் – காய்கறி சாம்பார்
வியாழக் கிழமை:
கம்பு சேமியா உப்புமா – காய்கறி சாம்பார்
பொங்கல் – சுரைக்காய் சாம்பார்
ராகி உப்புமா – கீரை சாம்பார்
கோதுமை ரவா உப்புமா – புடலங்காய் சாம்பார்
வெள்ளிக்கிழமை:
ராகி காய்கறி கிச்சடி
கம்பு சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவா காய்கறி கிச்சடி
கூடுதலாக ராகி கேசரி, கம்பு சேமியா கேசரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.