tirunelveli | kanyakumari | ராஜ் பகத் பி என்ற இளைஞர், தனது தந்தையின் ஸ்மார்ட்போன் மற்றும் பையைத் திருடிய திருடனைக் கண்டுபிடிக்க கூகுள் மேப்பைப் பயன்படுத்திய விதத்தை ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ராஜ், திருடனைக் கண்டுபிடித்து திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்க கூகுள் மேப்ஸில் இருப்பிடப் பகிர்வு அம்சத்தைப் பயன்படுத்தினார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர், “எனது தந்தையிடமிருந்து ஓடும் ரயிலில் திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்க @googlemaps எனக்கு எப்படி உதவியது என்பது பார்க்கலாம்” என எழுதியுள்ளார்.
அதில், ராஜின் தந்தை தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு நாகர்கோவில் - கச்சேகுடா எக்ஸ்பிரஸில் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்தார். நள்ளிரவு 1:43 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து ரயிலில் ஏறினார்.
ரயிலில் பெரிதளவு கூட்டம் இல்லை; என் அப்பாவுடன் ஏறிய மற்றொரு நபர் என் அப்பாவின் பை மற்றும் மொபைல் ஃபோனை அவரிடமிருந்து திருடி திருநெல்வேலி சந்திப்பில் ரயிலில் இறங்கிவிட்டார்.
அவரது தொலைபேசியும் பையும் திருடப்பட்டதை அறிந்த அவரது தந்தை, அதிகாலை 3:51 மணிக்கு நண்பரின் தொலைபேசி மூலம் தனது மகனைத் தொடர்பு கொண்டார்.
அப்போது போனில் லோகேஷன் ஆனில் இருந்துள்ளது. அப்போது, மொபைலின் இருப்பிடத்தை என்னால் கண்காணிக்க முடியும்” என்றேன்.
நான் அதைச் சரிபார்த்தபோது, திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே உள்ள தண்டவாளத்தில் மொபைல் சிக்னல் செல்வதை உணர்ந்தேன். எனவே திருடன் வேறு ரயிலில் நாகர்கோவிலுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தேன்.
பின்னர் ராஜ் தனது நண்பரை அழைத்தார், அவர்கள் இருவரும் காவல்துறைக்கு உதவி கேட்க சென்றனர். போலீசார் அவர்களுடன் நாகர்கோவில் ஸ்டேஷனுக்கு சென்று திருடன் வரும் வரை காத்திருந்தனர்.
ராஜ் மேலும் கூறுகையில், “கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திற்கு திருடன் வந்தான், அதில் கூட்டம் அதிகமாக இருந்தது, என்னிடம் இருந்த ஒரே அறிகுறி என் அப்பாவின் தொலைபேசி மற்றும் அவரது கருப்பு பை மட்டுமே. கூட்டத்தில், நாங்கள் அவரை இழந்தோம்.
ஆனால் என்னால் இன்னும் அவரைக் கண்காணிக்க முடிந்தது. அவரது அசைவுகளின் அடிப்படையில், அவர் பிரதான வாயில் வழியாக வெளியேறி, நாகர்கோவில் ரயில் நிலையத்தை அண்ணா பேருந்து நிலையம் மற்றும் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் உள்ளூர் பேருந்தில் சென்றதைக் கண்டேன். எனவே நாங்கள் பைக்கில் துரத்த ஆரம்பித்தோம்.
பின்னர் அண்ணா பேருந்து நிலையத்தில் அந்தத் திருடனை பிடித்தோம்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ட்விட்டர் பயனர் ஒருவர், “திருடன் போனில் ஜிபிஎஸ் கூட அணைக்கவில்லை போல் தெரிகிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலி; அவர் போனை சுவிட்ச் ஆஃப் செய்திருந்தால், கூகுள் மேப்ஸால் பாதையை பதிவு செய்ய முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
மற்றொரு பயனர் தாம் மும்பையில் ஐபோனை தொலைத்ததாகவும், இதனை கண்டுபிடிக்க லோகேஷன் ஆனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“