/indian-express-tamil/media/media_files/stz35altiONBLGYD2dLG.jpg)
மதுரை மாவட்டம், திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 10-ம் தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு ரத்து செய்து 50% சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளதால் உள்ளூர் மக்களும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருமங்கலம் அருகே கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி (டோல் கேட்) அமைந்துள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளதால் இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
மேலும், கப்பலூர் சுங்கச் சாவடி வழியாக உள்ளூர் வாகனங்கள் இதுவரை முழு கட்டண விலக்கி சென்று வந்ததால், உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பதில் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் அடிக்கடி பிரச்னை நடைபெற்று வந்தது. உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் கேட்கும் டோல்கேட் நிர்வாகத்தை எதிர்த்து சாலை மறியல், உண்ணாவிரதம் போராட்டங்கள் நடந்து வந்துள்ளன.
இந்நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம், உள்ளூர் வாகனங்கள் 4 ஆண்டுகளாக சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் கட்டணத்தை ஒருவாரத்தில் செலுத்துமாறு கடந்த 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அப்படி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. இதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கி வந்த நிலையில், நாளை நள்ளிரவு முதல் (ஜூலை 10) உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு 50% சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, உள்ளூர் மக்களுக்கும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.