சென்னையில் சில நாள்களுக்கு முன்பு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நாடு முழுக்க அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
அவரது பேச்சுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், "சனாதனம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும்" என விசிக தலைவரும், மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இந்து மக்களிடையே உள்ள இயல்பான நம்பிக்கையை, அரசியல் ஆதாயமாக மாற்றும் செயல் திட்டத்தை பாஜக தீட்டிவருகிறது.
பெரும்பான்மையான இந்துக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம்.
அவர்களின் ஆத்திரம் திமுக மீது தான். திமுக தலைவரின் மகன் உதயநிதி என்பது தான் அவர்கள் பிரச்னை. அதனால்தான் அவரை இழிவுபடுத்துகிறார்கள்.
சனாதனம் பற்றி நாம் தொடர்ந்து பேச வேண்டும். இந்தியா கூட்டணியை யாராலும் ஒழிக்க முடியாது. திமுக இல்லாமல் I.N.D.I.A கூட்டணி இல்லை. அது தான் உண்மை” என்றார்.
மேலும், “இந்தியாவை இந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும் அதற்கு தான் பாஜவினர் இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற நினைக்கிறார்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“