தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதன்படி, "சி.பி.எஸ்.இ பள்ளி பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இப்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக உருவாகி இருக்கும் நெருக்கடி ஆகும்.
இந்தக் காரணத்திற்காகத் தான் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அதனை தவிர்க்க வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதனடிப்படையில், தமிழகத்தில் இருந்து வலுவான எதிர்ப்பு குரல் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக சக்திகள் இதனை புரிந்து கொண்டு, தேசிய அளவில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 12-ஆம் வகுப்பில் மட்டுமே பொதுத் தேர்வு இருந்தால் போதுமானதாக இருக்கும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து.
ஆனால், 5, 8, 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளிலும் பொதுத் தேர்வு நடத்தி மாணவர்களை வடிகட்டி வீட்டிற்கு அனுப்பும் முயற்சியை பாசிச பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கை ஏன் வேண்டாம் என்பதற்கான பதிலை, இன்றைக்கு அவர்கள் வெளிப்படையாக வெளியிட்டிருக்கிற அறிவிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.