விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அயோத்தி தீர்ப்பு பற்றி பேசும்போது, இந்து கோயில் அமைப்பை பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்றும் பேசினார்.
திருமாவளவனின் இந்தப் பேச்சு சர்ச்சையாகி உள்ளது. திருமாவளவன் பேசியது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாக பாஜகவினர் இந்த்துவ அமைப்புகள் விமர்சித்தனர்.
இந்த நிலையில் திருமாவளவன், தான் பேசியது உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை உண்மை உண்டு என்பதை நண்பர்கள் அறிவார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், 'ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது' என்று நண்பர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட சிலர் என்னிடம் கூறினர்.
அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். 'அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு' என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன்.
ஒரு மணிநேரத்துக்கும் மேல் நான் ஆற்றிய உரையில் 10 நொடிகள் இடம் பெற்றுள்ள ஓரிரு சொற்களை மட்டுமே வெட்டியெடுத்து சிலர் பரப்புகின்றனர்.
எஞ்சிய உரை முழுவதும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல்ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல் இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.