விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக தலைமையகத்தில் இன்று (ஜன.10) நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுனரின் மக்கள் விரோத, அவை மீறலை கண்டித்து உடனடி எதிர்வினையாற்றிய முதல்வரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது.
இந்த எதிர்வினையை விசிக சார்பில் பாராட்டினோம். இது முதலமைச்சர், ஆளுனர் இடையேயான கருத்து முரண்பாடு இல்லை.
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள வேறுபாடு. இதை ஆளுனர் உணர்ச்சி வசப்பட்டு செய்யவில்லை. இந்த உரை ஆளுனரின் ஒப்புதலோடுதான் அச்சிக்கு சென்றுள்ளது.
இந்த உரையில் சிலவற்றை ஆளுனர் நிராகரித்துள்ளார். சிலவற்றை சேர்த்துள்ளார். வரும் 13ஆம் தேதி மாலை சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக சென்று ஆளுனர் மாளிகையை முற்றுகையிட உள்ளோம்.
இது தமிழக மக்களின் போராட்டம், இதில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும்” என்றார். தொடர்ந்து தமிழ்நாடு இலட்சினை தொடர்பான கேள்விக்கு, “இது வழியிலே காலை நீட்டி வம்பிழுக்கும் செயலாக உள்ளது. இதனை விசிக தரப்பில் கண்டிக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து, திராவிட அரசியலை தவிர்க்கிறார்கள், தமிழ்நாடு எனப் பேச மறுக்கிறார் என்றால் அவரை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற விசிக போராட்டங்களை முன்னெடுக்கும்” என்றார்.
புதுக்கோட்டை சம்பவம் தொடர்பான கேள்விக்கு, “சட்டப்பேரவையில் இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/