பெரியாரின் கருத்துகளை கூறும் திரைப்படத்தில் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான் நடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ள திருமாவளவன், அவருக்கு தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான், சிவபிரகாசம் இயக்கத்தில் 'பேரன்பும் பெருங்கோபமும்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின், சிறப்புக் காட்சி இன்று (ஜூன் 2) சென்னையில் திரையிடப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி, "பிராமணர்களை தாக்க வேண்டும் என்பது யாருடைய நோக்கமும் கிடையாது. பெரியாரின் நோக்கமும் அது கிடையாது. சாதிய கட்டமைப்பை தகர்க்க வேண்டும் என்று நினைக்கும் போது, பார்ப்பனியம் என்ற கருத்தை விமர்சிக்க வேண்டியதாக இருக்கிறது. இதனை தவிர்க்க முடியாததாக மாறுகிறது.
இப்படத்தில் கூட சாதி பெரியதா அல்லது சாமி பெரியதா என்ற ஒரு விவாதத்தை கதாநாயகன் முன்வைக்கிறார். சாமியையும், சாதியோடு பொருத்திப் பார்க்கும் ஒரு கலாசார பார்வை நம்மிடம் இருக்கிறது. இந்த குலதெய்வத்தை வழிபட்டால், இந்த சாதி என்று அறிந்து கொள்ளும் வகையில் நமது கலாசாரம் இருக்கிறது.
சாதியை தெரிந்து கொள்வதற்கு என்ன சாமியை வழிபடுகிறீர்கள் என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு அனைத்து நிலைகளிலும் சாதி இருக்கிறது. இதனை எதிர்த்து பேசும் போது, இந்தக் கருத்தின் மூலவர்களாக பிராமணர்கள் இருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதிரான வெறுப்பை பரப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் யாரும் அப்படி செய்யவில்லை.
சனாதான எதிர்ப்பு என்றாலே சாதிய கருத்தை எதிர்க்கிறோம் என்று தான் பொருள். இதைத் தான் பார்ப்பனியை எதிர்ப்பாக பெரியார், அம்பேத்கர் போன்றோர் அடையாளப்படுத்தினார்கள். இது போன்ற கருத்துகளை திராவிடர் கழகத்தினர் மட்டுமல்லாமல் எங்களை போன்றோரும் கூறி வருகிறோம். தங்கர்பச்சான், சிவபிரகாசம், விஜித் பச்சான் ஆகியோர் பேசுவது பெரியார் அரசியல் தான்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.