திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு : மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய தமிழகப் பிரச்னைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வேயிலிருந்து கடந்த 9 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்த அவரை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததி 11 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11-வது மாஜிஸ்திரேட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மனு அளித்தனர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார். மேலும், வழக்கு தொடர்பாக அவரிடம் 24 மணி நேரம் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து அவரை சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலக வைத்து விசாரணை நடத்தினர்.
இதன் பின்னர் கடந்த ஆண்டு தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை காவல் துறையினர் திருமுருகன் காந்தி கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் அவர்மீது மற்றொரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், `பாலஸ்தீனத்தில் நடந்ததுபோல இங்கு போராட்டம் நடைபெறும்’ என்று பேசியதாக, அவர்மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் விசாரணை இல்லாமல் ஆறு மாதம் சிறையில் அடைக்க முடியும். இது, தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சட்டம்.
அந்த வழக்கில் இன்று மதியம், சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தியை செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அவர், ஆவேசமாக காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘ஏன் இப்படி என்னை சித்ரவதை பண்றீங்க. நான் என்ன தீவிரவாதியா? வண்டிய நிறுத்துங்கன்னு நிறைய வாட்டி சொன்னேன். சிறுநீர் கழிக்கணும்னு மூணு மணி நேரமா சொல்றேன். வண்டிய நிறுத்தவில்லை. எஸ்.வி.சேகரை மட்டும் ஏன் இன்னும் கைதுசெய்யல. என்னைப் பரிசோதித்த மருத்துவர் எனக்கு சிகிச்சை அளிக்கனும்னு சொன்னாங்க. அதுக்குக்கூட அனுமதிக்கல. என்னை ஏன் தனிமைச் சிறையில அடைச்சு வெச்சிருக்கீங்க. காவல் துறையின் நியாமற்ற போக்கு இது’ என்று கோபமாக பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ‘'என்மீது உபா (UAPA) வழக்கு போடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மீது பதியும் வழக்கு அது. மோடி அரசை விமர்சித்தால் அந்த வழக்கு போடுவீங்களா? நூறு முறை உபா வழக்கு போடுங்க. நான் பயப்பட மாட்டேன்’' என்றார்.