திருமுருகன் காந்தி மனு தள்ளுபடி : திருமுருகன் காந்தியை விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய தமிழகப் பிரச்னைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வேயிலிருந்து கடந்த 9 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்த அவரை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததி 11 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11-வது மாஜிஸ்திரேட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மனு அளித்தனர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார். மேலும், வழக்கு தொடர்பாக அவரிடம் 24 மணி நேரம் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து அவரை சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலக வைத்து விசாரணை நடத்தினர்.
இதன் பின்னர் கடந்த ஆண்டு தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை காவல் துறையினர் திருமுருகன் காந்தி கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்நிலையில், திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரை விடுவிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி அவரின் தந்தை காந்தி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், சட்டவிரோதமாக காவல்துறை கைது செய்திருப்பதாகவும் முறையாக எந்த விதமான விசாரணை இல்லாமல் பழைய வழக்குகளில் கைது செய்திருப்பதால், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும். தற்போது இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருமுருகன் காந்தியை விடுவிக்கக் கோரிய அவரின் தந்தை காந்தியின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும், தற்போது தடுப்பு காவலில் கைது செய்யப்படாத நிலையில் ஆட்கொணர்வு மனுவில் உத்தரவிட முடியாது. எனவே மனுதாரர் சம்பந்தப்பட்ட விசாரணையை, நீதிமன்றத்தை நாடி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.