/indian-express-tamil/media/media_files/2025/03/10/0TtCPrCcwPHUwbptpoRe.jpg)
"தி.மு.க ஆட்சியில் இருப்பதால் அதை மாற்ற வேண்டும் என்கிறார். அது அவருடைய ஆசை, லட்சியம், கனவாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது." என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் வெயிலின் தாக்கத்தை தணிக்க திருச்சி மாநகர மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை திருச்சி மாநகர மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில், திருச்சி முன்னாள் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது. தமிழக அரசு கடும் சட்டங்களை இயற்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையினரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறுவதை வைத்து ஒட்டுமொத்த தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுவது அழகல்ல, அரசியல் நடத்துவது எதிர்க்கட்சியின் வேலை.
பா.ஜ.க ஆட்சியில் உள்ள மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லையா? பாஜக ஆட்சிக்கு வந்தால் இதை தடுப்போம் என கூறுவது சரியான வாதம் அல்ல. அவர்களாலும் மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக பா.ஜ.க-விற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்ற ராகுல் காந்தியின் கருத்தைப் பொறுத்தவரையில், சில இடங்களில் சிலர் ஒரு சிலரோடு இணக்கமாக இருந்து கொண்டு, யார் வேண்டுமானாலும் யார் கூடவும் பேசலாம், பழகலாம் அது வேற விஷயம். ஆனால், கட்சிக்கு துரோகம் செய்யும் விதத்தில், கட்சியை காட்டிக் கொடுக்கும் விதத்தில், கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கட்சியுடனும் சேர்ந்து செயல்படக் கூடாது, அதைத்தான் ராகுல் காந்தி குறிப்பிட்டு சொல்லி உள்ளார்.
நேற்று கூட எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 5,6 மாவட்டங்களை சுட்டிக்காட்டி கட்சிக்கு எதிராக சிலர் செயல்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, எல்லா கட்சியிலும் இதுபோன்று நடைபெறுகிறது. கட்சி தலைவர்கள் கண்டிக்கக்கூடியது வழக்கமான விஷயம் தான். இதில் அதிர்ச்சி ஒன்றும் கிடையாது. அதுபோல் இருந்தால் நடவடிக்கை எடுப்பது வாடிக்கையான, சகஜமாக, நிகழக்கூடிய விஷயம் தான்.
தி.மு.க-வை நேரடியாக விஜய் விமர்சனம் செய்வது, கட்சி ஆரம்பித்த காலம் முதலிலேயே தி.மு.க ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதை மையமாக வைத்தே விஜய் விமர்சித்து வருகிறார். மற்ற கட்சிகளை அவர் அதிகமாக விமர்சனம்செய்வதில்லை. பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை அவர் விமர்சனம் செய்வதில்லை. காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சனம் செய்வதில்லை, அதனால் பிரச்சனை இல்லை, நல்லது தான். பல கட்சிகளை அவர் விமர்சனம் செய்வதில்லை, அவர் தாக்குதல் பெரும்பாலும் தி.மு.க மீதுதான் உள்ளது.
தி.மு.க ஆட்சியில் இருப்பதால் அதை மாற்ற வேண்டும் என்கிறார். அது அவருடைய ஆசை, லட்சியம், கனவாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. அதனால் யாராலும் ஆட்சியை வீழ்த்த முடியாது. காங்கிரஸ் கூட்டணியில் வலுவாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரிய கட்சியில் மூன்றாம் இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.