சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், 6 காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முழுமையான விசாரணை நடத்தி, வரும் 8-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ஜான்சுந்தர்லால் இன்று இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணை முடிந்து, வரும் 8-ஆம் தேதி நீதிபதி ஜான்சுந்தர்லால் விரிவான அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பின்னரே, இந்த வழக்கு சிபிஐ வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், அஜித்குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.