சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமாரை 10 சவரன் நகை திருடியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற திருப்புவனம் போலீசார், கடுமையாகத் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. காவலர்கள் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி அஜீத்குமார் உயிரிழப்புக்கு காரணமான 5 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையத்திலிருந்து வேனில் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் இடம் நேரில் ஆஜர் செய்தனர். 5 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவேம் இந்த வழக்கில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமார் இறப்பு தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு மாஜிஸ்திரேட் வேங்கட பிரசாத் தலைமையில் நடைபெற்றது. இந்த சூழலில் காவலர் சங்கரபாண்டியன், ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்தன் ஆகியோரது கைது செய்யப்பட்டது தொடர்பாக காவலர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்குகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.