/indian-express-tamil/media/media_files/2025/07/04/thirupuvanam-ajith-kumar-postpartum-report-2025-07-04-08-33-58.jpg)
Thirupuvanam Ajith Kumar postpartum report
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி, திருப்புவனத்தில் காவல்துறை காவலில் அடைக்கப்பட்டிருந்த பி. அஜித் குமார் என்ற கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு, டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவின் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மடபுரம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் காரில் நடந்த நகை திருட்டு தொடர்பான புகாரில் அந்த கோயிலில் பணியாற்றிய தனியார் காவலாளி அஜீத்குமாரை காவல்துறையின் சிறப்புப் படை அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் ஜூன் 29 ஆம் தேதி உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மடபுரம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயில் அருகே காரில் நடந்த நகை திருட்டு தொடர்பான புகார் ஒன்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, அஜித் குமார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல்துறையினர் அஜித் குமாரை விசாரணை என்ற பெயரில் தாக்கியதில் அவர் ஜூன் 29 ஆம் தேதி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையினரால் அஜித் குமார் சித்திரவதை செய்யப்பட்டதே மரணத்திற்குக் காரணம் எனத் தகவல்களும் வெளியாகின.
இந்தச் சம்பவம் காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியதுடன், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரவலான கண்டனங்களை எழுப்பியது. சம்பவம் நடந்த அன்றே, குற்றஞ்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும், துணை கண்காணிப்பாளர் (DSP) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தைத் தெரிவித்தார். மேலும், நியாயமான, ஒளிவுமறைவற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்பத்திற்கு நீதி கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
அஜித் குமாரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி, வீட்டு மனைப்பட்டா மற்றும் அரசு வேலை ஆகியவையும் வழங்கப்பட்டன. இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மதுரை உயர்நீதிமன்ற கிளை தலையிட்டு, திருப்புவனத்தில் காவல்துறை காவலில் அடைக்கப்பட்டிருந்த அஜித் குமார் மரணமடைந்த வழக்கை டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவின் சி.பி.ஐக்கு மாற்ற உத்தரவிட்டது.
நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து ஒரு சி.பி.ஐ குழு இந்த விசாரணைக்கு பொறுப்பேற்க உள்ளது. மாவட்ட நீதிபதியின் அறிக்கை கிடைத்ததும், சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்து விசாரணையை முறைப்படி தொடங்கும்.
"வழக்கு பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ தலைமையகம் இந்த விசாரணையை சிறப்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு குற்றப்பிரிவு, ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் (பி. ஜெயராஜ் மற்றும் ஜே. பென்னிக்ஸ்) காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கையும் விசாரித்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.