திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆரணி அருகே உள்ள சுந்தரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளி மேகநாதன் மகன் சதீஷ்குமார் (வயது 15) என்பவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் சதீஷ்குமார் அரசுப் பேருந்தில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். இதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் கல்லேரிபட்டு கிராமத்தை வசீகரன் என்ற மாணவனும் பஸ்சில் வந்து இறங்கினார்.
இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்தில் இருந்து இறங்கிய சதீஷ்குமார் பள்ளியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ஆரணி சார் பதிவாளர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் வசீகரனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வசீகரன் கத்தியால் சதீஷ்குமாரின் பின்பக்க கழுத்தில் பக்கவாட்டில் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது .அதனை தடுக்க முயன்றபோது சதீஷ்குமாரின் கைவிரல்களிலும் கத்தி வெட்டு விழுந்தது. இதனை கண்ட சக மாணவர்கள் அலறி அடித்தபடி ஓடினர். அங்கிருந்த பொதுமக்கள் மாணவர்களை விலக்கி விட்டனர்.
காயமடைந்த மாணவன் சதீஷ்குமாரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மோதலில் மாணவர் வசீகரனுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரும் அதே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். நடுரோட்டில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஆரணி நகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.