thiruvannamalai ambulance driver exit couple with infant 25 km walk
பிரவசத்துக்குப் பிறகு பச்சிளம் குழந்தையுடன் பெண் ஒருவர் 25கி.மீ நடந்தே சென்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது.
Advertisment
இந்திய நாட்டில் ஆம்புலன்ஸ் இல்லாமல், அமரர் ஊர்தி கிடைக்காமல் பல கிலோ மீட்டர்கள் தூரம் நோயுற்றவர்கள், இறந்தவர்களை சுமந்து செல்லும் அவலத்தை நாம் மாதத்துக்கு ஒருமுறையாவது பார்க்க நேரிடுகிறது.
தமிழ்நாட்டிலும் அப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
செங்கம் அருகேயுள்ள ஜவ்வாது மலையின் கிராமம் ஒன்றில் வசிக்கும் சிதம்பரம் என்பவர், பிரசவத்துக்காக தனது மனைவி ராஜேஸ்வரியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 29ஆம் தேதி அனுமதித்தார்.
அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
பிரசவம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் நேற்று (ஏப்ரல் 1) மருத்துவர்கள் வீடு திரும்பக் கூறியுள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேறு வாகனங்கள் கிடைக்காததால் மருத்துவமனையின் தாய் சேய் நல வாகனத்தில் தம்பதியர் தங்கள் மலை கிராமத்திற்கு கிளம்பியுள்ளனர்.
மதியம் 2 மணிக்கு கிளம்பிய நிலையில் மாலை 5 மணியளவில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் வாகன ஓட்டுநர் தம்பதியை இறங்கிக் கொள்ளுமாறு சொல்லி, இதற்கு மேல் வண்டி வராது என்று இறக்கிவிட்டுள்ளார். வலுகட்டாயமாக இறக்கிவிட்டு ஓட்டுநர் வாகனத்துடன் சென்றதால், செய்வதறியாது தவித்த தம்பதி பச்சிளம் குழந்தையுடன் 25 கி.மீ தூரம் ஆபத்தான மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உருவானது.
மலையில் சூழ்ந்த இடத்தில், அதுவும் விலங்குகள் அதிகம் தென்படும் மாலை நேரத்தில் பச்சிளம் குழந்தையுடன் அவர்கள் தங்கள் கிராமத்தை நோக்கி நடந்து சென்றனர். இந்தத் தகவல் சமூக ஆர்வலர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டபின் இரு சக்கர வாகனத்தில் ஊர்க்காரர்கள் வந்து ராஜேஸ்வரியையும் குழந்தையையும் இரவு 7 மணியளவில் அழைத்துச் சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”