திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோயில் குகையில், பத்து நாட்கள் தங்கியிருந்த சீனா நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்ததுள்ளது.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தை சேர்ந்தவர் யோருய் யாங். 35 வயது நிரம்பிய இவர், இந்தியாவின் ஆன்மிக வழிமுறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதிலும், தன்னை யோகா மாணவனாக அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்கிறார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ரிஷிகேசி உட்பட இந்தியாவின் வட மாநிலங்களுக்கு வருகை புரிந்த இவருக்கு, இந்த முறை தமிழ்நாட்டு பயணம் சிறப்பானதாக அமையவில்லை.
காரணம், கொரோனா வைரஸ்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக , இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச்- 24ம் தேதி தேசிய பொது முடக்கத்தை அறிவித்ததையடுத்து, திருவண்ணாமலை ரமண ஆசிரமத்திற்கு அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த இவரை உடனடியாக காலிசெய்யும் படி வீட்டு உரிமையாளர்கள் வற்புறுத்தியிருக்கின்றனர்.
பிறகு, இவரின் சொந்த நாடு சீனா என்பதால், பெரும்பாலான வீட்டு/விடுதி உரிமையாளர்கள், இவரை தங்க வைப்பதில் தயக்கம் காட்டியுள்ளனர். மனமுடைந்த இவர், இறுதியாக உள்ளூர் வழிகாட்டியின் உதவியுடன், அண்ணாமலையார் மலை உச்சியில் உள்ள ஒரு குகையில் தஞ்சமடைந்தார்.
பின்னர், இவர் குறித்த தகவல் உள்ளூர் நிர்வாகத்திற்கு செல்ல, இவரை முறையாக மருத்துவமனையில் அனுமதித்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்திருக்கின்றனர். அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டடுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி, இது குறித்து கூறுகையில், " மார்ச்- 25 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை திருவண்ணாமலை உச்சி கொகையில், சீனா நாட்டை சேர்ந்தவர் தங்கியிருந்தது உண்மை தான். பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர் சீனாவிற்கு திரும்பும் வரை அவரின் உணவையும், இருப்பிடத்தையும் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யும்" என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil