திருவாரூரில் மூதாட்டி கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி ஆனந்த் பாபுவை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வெட்டிக்காட்டில், ஆடுகளைக் தோட்டத்தில் கட்டுவது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மீண்டும் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமி (83) என்ற மூதாட்டியை அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாய் மலர்கொடி ஆகியோர் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த முத்துலெட்சுமி, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதையடுத்து, மன்னார்குடி காவல்துறையினர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாயார் மலர்கொடி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்த் பாபுவைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தபாபுவின் தாயார் மலர்கொடியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மூதாட்டி கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி ஆனந்த் பாபுவை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சி. ஆனந்தபாபு, (திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.