/indian-express-tamil/media/media_files/2025/04/01/E3laDV7UaP3z4wm331OQ.jpg)
திருவாரூர் மாவட்டத்திற்கு 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை!
திருவாரூரில் ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ள ஆழித்தேரோட்டத்துக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான பிரசித்திபெற்ற ஆழித்தேரோட்டம் 7-ம் தேதி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடை பெறவுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட தேர் 350 டன் எடை கொண்டதாகவும், 96 அடி உயரம் கொண்டதாகவும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது. தேரோட்டத்துக்காக கட்டுமானப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், தேரில் பொருத்தப்பட உள்ள பொம்மைகள், போர்த்தப்படவுள்ள திரைச்சீலைகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன
ஆழித் தேரோட்டத்தையொட்டி, 6-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமி, அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து 7-ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம்பிடிக்கும் நிகழ்வு நடைபெறும்.
அதைத்தொடர்ந்து, காலை 9 மணி அளவில் ஆழித்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தேரோட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் ஆகியோர் ஆழித் தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளையும், ஆழித்தேர் கட்டுமான பணிகளையும் நேற்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர். தேரோட்டத்தையொட்டி 7-ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.