தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருப்பதாவது: “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன்.
பொதுமக்கள் மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் வழித்தோன்றல்களின் கோரிக்கையின்படி, அன்னாரின் நூற்றாண்டையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.” என்று அறிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில், “தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திர பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரி மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோ தமிழ்நாடு முதலமைச்சர மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினார்.
தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924-ம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றார். மேலும், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனார் சமூக பங்களிபினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்ததற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வி.சி.க தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது: “சாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமென அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். விடுதலைச் சிறுத்தைகளின் நெடுநாளைய கோரிக்கை நிறைவேறியதில் பெருமகிழ்ச்சி.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“