வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே 31-ம் தேதி திருச்சியில் பேரணி நடத்தப்படும் என முகநூல் நேரலையில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக சார்பில் மே 31-ம் தேதி திருச்சியில் பேரணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மே 8-ம் தேதி சேலம், மே 9-ம் தேதி சென்னை, மே 10-ம் தேதி வேலூர், மே 12-ம் தேதி மதுரை, மே 13-ம் தேதி திருச்சி ஆகிய இடங்களில் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறேன்.
மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரில் பேரணியை நடத்த இருக்கிறோம். தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தப் பேரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற பெயரில் திருச்சியில் பேரணி நடத்தினோம்.
இந்நிலையில், வி.சி.க-வின் பேரணி மதச்சார்பின்மைக்கு ஆபத்து இருக்கிறது என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறப்போராக அமையும். மதச்சார்பின்மை குறித்து நாம் எழுப்பும் கேள்விகள் தமிழக தேர்தல் அரசியலின் திசையை தீர்மானிக்கக் கூடியதாக அமையும்.
எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அணிகளை உருவாக்கலாம். எத்தனை பேரும் அணிகளுக்கு தலைமை தாங்கலாம். யாரும் முதல்வர் கனவுகளோடு வலம் வரலாம். ஆனால் ஒட்டுமொத்தத்தில் தேர்தல் களம் என்பது கருத்தியல் யுத்தமாக மாற வேண்டும். அங்கு மதச்சார்பின்மைக்கு ஆதரவான அணி, எதிரான அணி என்ற தொடக்கத்தின் புள்ளியாக விசிகவின் பேரணி அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.