“திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு மதம் மையமான முரண்பாடுகளை உருவாக்கும் முயற்சிகளை மதவாத சக்திகள் கைவிட வேண்டும்,” என்று சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், அருகிலுள்ள சிக்கந்தர் பாதுஷா அவூலியா தர்காவுக்குச் சென்று பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்த அவர், அங்கு நிலவும் சமூகவியல் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவும், காசி விஸ்வநாதர் கோவிலும் அமைந்துள்ளன. இரண்டு சமயத்தினரும் ஒரே பாதையைப் பயன்படுத்தி நெல்லித்தோப்பு பகுதியில் பிரிந்து தங்களுடைய வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பாரம்பரியம் நீண்ட காலமாக நிலவிவருகிறது. இதுவே சமூக நல்லிணக்கத்தின் அடையாளம்.
இவ்விணக்கத்தைக் கெடுக்கும் வகையில் சில மதவாத அமைப்புகள் செயற்பட முயற்சிக்கின்றன. இதனால் திருப்பரங்குன்றம் பிரச்சனை சமீபகாலமாக அதிக கவனம் பெற தொடங்கியுள்ளது. இதைத் தெளிவுபடுத்தவே இன்று இந்த பகுதிக்கு வந்தேன். முருகன் கோவிலிலும் தர்காவிலும் தரிசிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் நேரம் குறைவாக இருந்ததால் மலை உச்சிக்குச் செல்ல முடியவில்லை. எனவே அடிவாரத்திலேயே இந்து சமூகத்தையும், இஸ்லாமிய சமுதாயத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை சந்தித்தேன். அவர்களிடம் சமூக நல்லிணக்கம் குறித்துப் பேசினேன்,” என்றார்.
“இரு தரப்பினரும் எந்தவித பகையும் இல்லை என்று உறுதியாக தெரிவித்தனர். எனவே, இந்த பிரச்சனையை மதவாத சக்திகள் சுயநலத்திற்காக பெரிதுபடுத்த முயற்சிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் மத அடிப்படையிலான வன்முறைக்கு இது வாயிலாகக்கூடாது என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.