/tamil-ie/media/media_files/uploads/2018/09/New-Project-62.jpg)
துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் விடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம்:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23ம் தேதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக இந்த ஆணையம் விசாரணை நடத்தியது.
துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை பிரமாண வாக்குமூலமாக தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விசாரணை முழுமையாக முடிவு பெறாத நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.