தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 அன்று (13/06/2025) தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது.
நிறைவு நாளான (15/06/2025) நேற்று தூத்துக்குடி அரசு மாவட்ட இசைப் பள்ளி, நெய்தல் கலைக்குழு, நெய்தல் கலைக்குழு, கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, உவரி களியல் கலைக்குழு, ஃபோக் மார்லி அந்தோணி தாசனின் இசைக்குழு ஆகிய மண் சார்ந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சியைக் கனிமொழி கருணாநிதி எம்.பி கண்டு மகிழ்ந்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளைக் காட்சிப்படுத்தும் விதமாக உணவு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவு அரங்குகளுக்கு கனிமொழி எம்.பி நேரில் சென்று, அரங்குகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, பல வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கனிமொழி எம்.பி கலந்துரையாடினார்.
இந்த கலை நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்