தூத்துக்குடியில் அனல் மின்நிலையத்தில் வெப்பக்காற்று வெளியேறி 3 தொழிலாளர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள மேலமருதூரில் தனியார் அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 600 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 மின் உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று காலை வழக்கம் போல் மின்சார உற்பத்தி நடந்து கொண்டு இருந்தது. அனல் மின்நிலையத்தில் உள்ள கொதிகலனை தண்ணீர் கொண்டு குளிர்விக்கும்போது, வெளியேறும் வெப்பக்காற்று தனியாக குழாய் வழியாக வெளியில் கொண்டு செல்லப்படும்.
இந்த குழாயில் அதிக வெப்பத்துடன் காற்று வெளியேறி செல்லும். நேற்று காலை வெப்பக்காற்று வெளியேற்றும் குழாய் அருகே தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குழாயில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் அதிக அழுத்தத்துடன் வெப்பக்காற்று வெளியேறியது.
அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த எப்போதும் வென்றான் கண்ணக்கட்டையை சேர்ந்த ஆறுமுககனி (32), கருங்குளம் பாரதியார் வடக்கு தெருவை சேர்ந்த சங்கரசுப்பு (41), தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த அன்புராஜ் (36) ஆகிய 3 பேர் மீதும் வெப்பக்காற்று பட்டது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர்.
உடனடியாக 3 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தருவைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்