/tamil-ie/media/media_files/uploads/2020/02/rajinikanth-santhosh-arrested.jpg)
ரஜினிகாந்த் கேள்வி கேட்ட தூத்துக்குடி சந்தோஷ், தமிழ் செய்திகள், Rajinikanth, Thoothukudi, santhosh
தூத்துக்குடி சந்தோஷ்.. ஞாபகம் இருக்கிறதா?. ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார், நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினியைப் பார்த்து, ‘யார் நீங்க?’ எனக் கேட்டார் சந்தோஷ்.
ரஜினிகாந்த், ‘நான் தான்பா ரஜினிகாந்த்’ என தன்னை அறிமுகப்படுத்திவிட்டு வந்தார். எனினும் அங்கிருந்து கிளம்பி வந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில், ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் என கிளம்பினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்’ என கொந்தளித்தார். அன்று அந்த அளவுக்கு ரஜினிகாந்த் டென்ஷனாக சந்தோஷின் கேள்வியும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. அந்த சந்தோஷ் தற்போது பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் 24. இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் அண்மையில் காணாமல் போனது. இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் முடிவில் துாத்துக்குடி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் (23), கால்டுவெல் காலனியை சேர்ந்த மணி (23), ஆசிரியர் காலனியை சேர்ந்த சரவணன் (22) ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து பைக் கை பறிமுதல் செய்தனர். இந்த சந்தோஷ்தான் ரஜினியை கேள்வி கேட்டவர் என்கிற தகவலும் வெளியானது.
இதையொட்டி ரஜினி ரசிகர்கள் இந்த தகவலை ‘ஷேர்’ செய்து டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.