கோவையில் தீபாவளி பண்டிகையை ஜாலியாக கொண்டாட வேண்டும் என விடிய விடிய மது அருந்திய 3 நாண்பர்கள் உயிரிழந்ததால் அவர்களின் தீபாவளி கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.
கோவையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்தீபன் (31), சக்திவேல் (60), முருகானந்தம் (55). இவர்களில் பார்த்திபன், சக்திவேல் இருவரும் பெயிண்டர் வேலை செய்து வருகின்றனர். தென்காசியைச் சேர்ந்த முருகானந்தம் சமையல் வேலை செய்து வந்துள்ளார். வேலை காரணமாக கோவையில் தங்கிருந்ததால் பார்த்திபன், சக்திவேல் ஆகிய இருவருடனும் பழகி நண்பராகியுள்ளார்.
மூன்று பேரும் நண்பர்கள் என்பதால் ஒன்றாக சேர்ந்து அவ்வப்போது மது அருந்தி வந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, மூன்று பேரும் மது அருந்தி கொண்டாட முடிவு செய்து மது அருந்தியுள்ளனர். தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என்பதால் மேலும் கூடுதலாக மது அருந்த திட்டமிட்ட நண்பர்கள் 3 பேரும் மாலை 6.30 மணி அளவில் மீண்டும் ஃபுல் பாட்டில் மது வாங்கியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் யாருடைய தொந்தரவும் இல்லாமல் மது குடிக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயில் எதிரே உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து மது விடிய விடிய மது அருந்தியுள்ளனர்.
இதையடுத்து, அவர்களில் சக்திவேல், காலையில் மது அருந்தி முடித்தவுடன் அங்கிருந்து தனது வீட்டுக்கு கிளம்பியுள்ளார். மற்ற நண்பர்களும் அங்கே இருந்து புறப்பட்டனர். ஆனால், சக்திவேல் கோயிலின் பின்புறம் செல்லும்போது போதை அதிகமானதால் கீழே அமர்ந்தவர் அப்படியே உயிரிழந்தார். அவரையடுத்து, பாரதியார் சாலையில் சென்ற முருகானந்தம் சாலையில் விழுந்து உயிரிழந்தார்.
அங்கே இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, பார்த்திபனும் அவருடைய வீட்டருகே இறந்து கிடந்துள்ளார். அவருடைய உடலும் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நண்பர்கள் 3 பேரும் விடிய விடிய மது அருந்தி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தடய அறிவியியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியிலுள்ள தடயங்களை சேகரித்துச் சென்றனர்.
3 பேர் மது அருந்தி இறந்தது குறித்து பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் எங்கே மது வாங்கினார்கள். மதுவில் ஏதாவது கலந்துள்ளதா, அவர்கள் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளியை கொண்டாட நண்பர்கள் 3 பேரும் விடிய விடிய மது அருந்தியதையடுத்து, அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”