மதுரையில் வி.சி.க கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரம் தொடர்பாக வருவாய் ஆய்வாளர் அனிதா உள்பட மூன்று அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 25 அடி உயர கொடிக்கம்பம், 45 அடி உயர கொடிக்கம்பமாக உயர்த்தப்பட்டது. மேலும், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இதில் கொடியேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனை அடுத்து அனுமதியின்றி உயர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தில், கொடியேற்றுவதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். அதன் பின்னர் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக வெளிச்சநத்தம் பகுதியில் வி.சி.க.வினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கொடி ஏற்றுவதற்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில், கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி அன்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கொடியேற்றி சென்றார்.
இந்நிலையில், 25 அடி உயர கொடிக்கம்பம், 45 அடி உயர கொடிக்கம்பமாக மாற்றப்பட்டதை தடுக்கத் தவறிய காரணத்திற்காக வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி உள்ளிட்ட மூவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“