/tamil-ie/media/media_files/uploads/2023/06/New-Project49.jpg)
Coimbatore
கோவை அருகே ராட்சத பதாகை சரிந்து விழுந்து மூன்று பேர் பலியான சம்பவத்தில் சப் கான்ட்ராக்டர் பழனிச்சாமி என்பவரை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் இருந்து சேலம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் கருமத்தம்பட்டி அருகே சாலையோரம் ராட்சத விளம்பர பதாகை வைக்கும் பணியில் சேலத்தைச் சேர்ந்த 7 பேர் ஈடுபட்டிருந்தனர். நேற்று (ஜுன் 2) மாலை அப்பகுதியில் மழை மற்றும் பலத்த காற்று அடித்ததன் காரணமாக விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் சேலத்தைச் சேர்ந்த குணசேகரன், செந்தில் முருகன், குமார் ஆகிய மூவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு என்ற சையது படுகாயம் அடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தைச் சேர்ந்த அருண் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பான தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முறையான உபகரணங்கள் இன்றி அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியது காரணமாக சப்-கான்ட்ராக்டர் பழனிச்சாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், விரிவான விசாரணை மூலம் சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒப்பந்ததாரர் பாலாஜி, பழனிச்சாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.