வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில் நீண்ட நாட்களுக்கு பிறகு, இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பு தெரிவித்தது.
ஆனால், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், வழக்கின் விசாரணை நிறைவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதற்காக, பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் துர்நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, சமர்ப்பித்த அறிக்கையை பிரமாண மனுவாக தாக்கல் செய்யும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலில் நடைபெற்றது. அப்போது, இது குறித்த விசாரணை மார்ச் 27-ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றத்தை பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது எனவும், கீழ்மட்ட அளவில் விசாரணையை கண்காணிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேறு நிவாரணம் வேண்டுமென்றால் கீழ் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் கொண்ட அமர்வு அறிவுறுத்தியுள்ளனர்.