தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிபாளையத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில், திவ்யா மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் ஒரு வளையல் மற்றும் சங்கிலியை அடமானம் வைப்பதற்காக நேற்று (ஜன 28) வருகை தந்தனர்.
அவர்கள் பல முறை அதே நிறுவனத்தில் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்ற நிலையில், மீண்டும் அடமானம் வைப்பதற்காக அதே வளையல் மற்றும் சங்கிலியை கொண்டு வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த நிதி நிறுவன அதிகாரி கஜேந்திரன், கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் அடமானம் வைப்பதற்காக கொண்டு வந்த நகையை சோதனை செய்ததில், அவை தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகள் எனக் கண்டறியப்பட்டது. அதன்பேரில், திவ்யா மற்றும் சரஸ்வதியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கொல்லுப்பேட்டை தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் போலி நகைகளை அவர்களிடம் கொடுத்து அடமானம் வைத்து வருமாறு அனுப்பியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மணிவண்ணனையும் போலீசார் கைது செய்தனர். இதில், கும்பகோணம், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து போலி நகைகளை வாங்கி அடமானம் வைத்து, இதுவரை ரூ.16.31 லட்சம் மோசடி நடைபெற்றதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் கவிதா என்பவரையும் தேடி வருகின்றனர்
செய்தி - க. சண்முகவடிவேல்